உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்நோக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீப கால அமெரிக்க தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் மிக அதிக வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சிக்கு 74 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னுடைய வழக்கமான மூர்க்கத்தனத்துடன் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறார். இந்த விசயத்தில் அவருடைய குடும்பமே இரண்டாகப் பிரிந்துள்ளது. சிலர் தேர்தல் முடிவுகளை ஏற்க வேண்டும் என்றும், வேறு சிலர் ஏற்கக் கூடாது என்றும் கூறி வருகின்றனர். குடியரசுக் கட்சியில் தேர்தல் முடிவை ஏற்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எனினும், தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.
அதிகார மாற்றம் எப்போது?
தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தபோதும், அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக அவர் அடுத்த ஜனவரி 21 ஆம் தேதிதான் பதவியேற்க முடியும். அதுவரை டொனால்டு டிரம்ப்தான் ஜனாதிபதியாக தொடர்வார். இந்தக் காலத்தில் அவர் எத்தகைய முடிவுகளை எடுப்பார் என்பது குறித்து பல்வேறு அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வெற்றி பெற்றவர் பொறுப்பேற்க முடியாது. ஏற்கனவே உள்ள நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்வார்கள். பிறகு புதிதாக பொறுப்பேற்க இருப்பவர், தனக்கான நிர்வாக அமைப்பை உருவாக்கி அதற்கேற்ப பல்வேறு பதவிகளுக்கான நபர்களை நியமிப்பார்.
இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. முதன் முதலாக ஒரு பெண்மணி இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தாயின் பூர்வீகம் தமிழகம் என்றாலும், கமலா ஹாரிசின் தாயார் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இவரது குடியுரிமையில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்றே குறிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜனாதிபதி பதவிக்கு வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண்மணியான ஹிலாரி கிளிண்டன் ஒருமுறை போட்டியிட்டார். துணை ஜனாதிபதி பதவிக்கு இரு பெண்கள் போட்டியிட்டனர். அவ்வளவுதான்.
பெண்களின் வெற்றி
1788 ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்களின் வாக்குரிமைக்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், 1920 ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அப்போதும் கூட, கருப்பினத்தவர், ஆசியர்கள், ஹிஸ்பானிக் (ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரேசிலிலிருந்து குடியேறியவர்கள்) இன பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. தொடர் போராட்டங்களின் விளைவாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம்தேதிதான் அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. வளர்ந்த நாடு என்று தன்னை கூறிக் கொண்டாலும், பெண்ணுரிமை விசயத்தில் மிகவும் பிற்போக்காகவே நடந்து வந்த ஒரு நாட்டின் துணை ஜனாதிபதியாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தனக்கு வாக்களித்தவர்களை மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களையும் அரவணைத்து செல்வேன் என்றும், பிளவுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்காவை ஒன்றுபடுத்துவதே தன்னுடைய முதன்மையான நோக்கம் என்றும், சிவப்பு , பச்சை என்று பிளவுபட்டுள்ள இரு அமெரிக்காவை, ஒரே அமெரிக்காவாக மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றுக்கொன்று எதிர்க்கட்சியே தவிர, எதிர்கள் அல்ல. சமுதாயத்தில் உருவாகியுள்ள அராஜகத்தை அகற்ற வேண்டியுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும், இந்த வெற்றியை அமைதியாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்றும், பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்திலும் அமெரிக்கா இணையும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளது மிகவும் கவனிக்கப்படுகிறது.
வலதுசாரிகளின் ஆபத்தான அணுகுமுறை
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர், தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்று கூறி கையில் துப்பாக்கியுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். இது உலகம் முழுவதும் வலதுசாரிகள் பின்பற்றும் அணுகுமுறைதான். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள். பிறகு, அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனநாயக அமைப்புகளை அழிப்பார்கள். இது அமெரிக்காவின் டிரம்புக்கும் பொருந்தும். இந்தியாவில் பாஜகவுக்கும் பொருந்தும். இன்று உலகத்தில் உருவாகியுள்ள வலதுசாரிப் போக்கு ஜனநாயகத்தையே அழிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க சமுதாயம் ஒற்றுமையாக இல்லை. இதை ஒன்றுபடுத்துவதற்கான, தீர்மானகரமான சிந்தனையும் இல்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இன்டர்நெட், வாட்ஸ்அப் ஆகியவை அரசியலையும், தேர்தலையும் நாடகமாக மாற்றிவிட்டன. அரசியல் விவாதங்கள் கூட, நாடகமாகவே மாறி, பிளவை ஆழமாக்கியுள்ளன.
ஆழமாகியுள்ள பிளவு
ஒவ்வொரு சமுதாயத்திலும் வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கும். இன்று அமெரிக்க சமுதாயத்தில்,முரண்பாடுகளை அகலப்படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல் இவைகளுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய அளவில் முரண்பாடுகள் முற்றியுள்ளன. இந்த இண்டர்நெட் யுகத்தில் அடையாள அரசியல் வேகமாகவும் ஆழமாகவும் உருவாகியுள்ளது. பழைய குடியேறிகளுக்கும், புதிய குடியேறிகளுக்கும், குடியுரிமை இல்லாத லட்சக்கணக்கானோருக்கும், ஒவ்வொரு மொழி, இனம் இடையே இருக்கக் கூடிய முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் டிரம்ப் அரசு இந்த முரண்பாடுகளை மிகவும் ஆபத்தான பாதையில் தள்ளியுள்ளது. அமெரிக்கா பொது சுகாதாரத்தில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க முடியாதது மட்டுமல்ல, தேர்தலை மனதில் வைத்து தொற்றை பரவ வைப்பது. அதை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் டிரம்ப் முயன்றார். இதுவரை கொரோனா தொற்றினால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் கூட இன வேற்றுமை காட்டப்பட்டது.இந்தக் காலத்தில் கருப்பின மக்களை வேட்டையாடுவது என்பது அதிகரித்துள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் உள்ளிட்டவர்களின் படுகொலை, அதனைத் தொடர்ந்து அமெரிக்க மக்களின் பெரும் போராட்டம் போன்றவை அங்கு நிலவும் இன வெறியை வெளிச்சமிட்டுக் காட்டியது. இத்தகைய ஆழமான சமூக முரண்பாடுகளுக்கு இடையேதான் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது.
டொனால்டு டிரம்பை பொறுத்தவரை அவர் பலமான அரசியல் பின்னணி கொண்டவர் அல்ல. ரியல் எஸ்டேட் தொழில் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வந்த ஒரு பெருமுதலாளி. அவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜனாதிபதியாகவும் தேர்வு செய்யப்பட்டவர். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நீதித்துறையில் தலையீடு, நிதி முறைகேடுகள், மாநிலங்களை மதிக்காத போக்கு, வரிக் கொள்கை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. இவற்றில் சில புகார்களில் அவர் வழக்குகளை சந்திக்கக் கூடும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.டிரம்ப் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமான புண்ணை ஆற்றுவது எப்படி என்பதுதான் எங்களது மிகப்பெரிய கவலை என்று ஜோ பைடன் பேசியுள்ளார். அமெரிக்காவினுடைய சமூக அமைப்புக்கென்று ஒரு வரலாறு, கலாச்சாரம் இருந்தது. உலகிலேயே அதிகமான நோபல் பரிசு பெற்றவர்கள் அமெரிக்கர்கள்தான். 300-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பத்தில் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. நிலவுக்கு மனிதனை முதன் முதலில் அனுப்பியதும் அந்த நாடுதான். உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்கு உயர்கல்வி பெற மாணவர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், அமெரிக்க அதிகார வர்க்கம் மக்களை பிளவுபடுத்தி ஆள்வதன் மூலம் ஆழமான பிரிவினையை உருவாக்கியுள்ளது.
கொள்கை ஒன்றே - அணுகுமுறை மாறும்
ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் கொள்கையில் பெரிய வேறுபாடு இல்லை. அயல்துறைக் கொள்கையோ அல்லது வர்த்தகக் கொள்கையோ பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், அதை அமல்படுத்துவதில் வித்தியாசம் உண்டு. டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் சீனத்துடன் ஏற்பட்ட முரண்பாடு தொடரும். எனினும், டிரம்ப் நிர்வாகம் பின்பற்றிய வன்மமான அணுகுமுறையில் சற்று மாற்றம் இருக்கக் கூடும். இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தங்கள் தொடரும். ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட விசயங்களிலும் அமெரிக்காவின் அணுகுமுறை அப்படியேதான் இருக்க வாய்ப்புள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தங்களுடைய படைபலத்தை அதிகரிப்பது என்பதும் தொடரவே செய்யும். ஆனால், இவைகள் சற்று நிதானமாக, ராஜதந்திர முறையில் குடியரசுக் கட்சி ஆட்சி செய்யக் கூடும்.
உதாரணமாக, இந்தியாவிற்கு விஜயம் செய்த பராக் ஒபாமா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். வளர்முக நாடுகளுக்கு அமெரிக்கா ஏற்றுமதி வரிச்சலுகை உள்ளிட்ட பல வர்த்தக சலுகைகளை அளித்து வந்தது. நாடாளுமன்றத்தில் பராக் ஒபாமா பேசும்பொழுது, இந்தியாவை ஏன் இன்னமும் வளர்முக நாடு என சொல்கிறீர்கள்? இது வளர்ந்த நாடு என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், இந்தியாவுக்கு இனி சலுகைகள் இல்லை என்பதுதான் ஒபாமா பேச்சின் பொருள். ஆனால் டிரம்ப் நிர்வாகம் பொருளாதார மற்றும் வர்த்தக விசயங்களில் எந்தளவுக்கு அடாவடியாக நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா தொற்றுக் காலத்தில் மருந்துகளை தட்டிப் பறித்துச் சென்றது. அமெரிக்காவின் விவசாயப் பொருட்களை வாங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் திசை வழி ஒன்றேயாயினும், நடைமுறைப்படுத்துவதில் இரு கட்சிகளுக்கிடையே வித்தியாசம் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுடன் டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள கசப்பை ஜோ பைடன் குறைப்பதற்கு முயலக் கூடும்.
சவாலான பொருளாதார நெருக்கடி
அமெரிக்க பொருளாதாரம் உலகில் வலுவான பொருளாதாரமாக இருந்தாலும், அதனுடைய கொள்கைக் காரணமாக அதனுடைய டாலர் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினுடைய கடன் சுமை மிகவும் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் அந்நாட்டிற்கான 22 டிரில்லியன் டாலருக்கு மேல் (1 டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் சீனாவிடமிருந்து 1.1 டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா கடன் பெற்றுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்தும் அமெரிக்கா கடன் பெற்றுள்ளது. டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.சில்லரை விற்பனை சரிவடைந்துள்ளதால், லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான உணவகங்கள், குறு-சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவின் 2-வது அலை உருவாகியுள்ளதால், பொருளாதாரம் மேலும் மோசமாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் பொறுப்பேற்றபோது, 4.7 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதன் சுமையை வளர்முக நாடுகளின் மீது மடை மாற்றுவது தொடரவே செய்யும்.
மொத்தத்தில், டிரம்ப் மேற்கொண்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், இனவெறுப்பை தூண்டிவிடும் நடவடிக்கைகள், நிர்வாகத்தை கேலிக்கூத்தாக மாற்றியது போன்றவை அவரது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த அதிருப்தி ஜோ பைடனுக்கு உதவியுள்ளது. அமெரிக்காவில் எத்தகைய மாற்றங்களை ஜோ பைடன் கொண்டு வரப் போகிறார் என்பது அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் பாதிக்கும். எனவே, ஜோ பைடனின் நடவடிக்கைகளை உலகமும் உற்று நோக்கி கவனிக்கும்.
*****************
பாஜகவினரின் இரட்டை வேடம்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசின் தாயார் மன்னார்குடி அருகேயுள்ள கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால், பாஜகவைச் சேர்ந்த சிலரும் அவரது வெற்றியை கொண்டாடுகின்றனர். கமலா ஹாரிசின் குடும்பத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த- இனங்களைச் சேர்ந்தவர்கள் மண உறவுகொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில், பாஜகவினர் சாதி- மத மறுப்பு திருமணங்களை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவ்வாறு திருமணம் செய்பவர்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்த திருமணங்களை அவர்கள் ‘லவ் ஜிகாத்’என்று அழைக்கின்றனர். அப்படி பார்த்தால், கமலா ஹாரிஸ் ‘லவ் ஜிகாத்’ செய்து கொண்டவர்தான். இதற்கு
பாஜகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
===டி.கே.ரங்கராஜன்,===
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)